புதன், 8 அக்டோபர், 2014

சங்கச் சிந்தனைகள் - 3

வழக்கம்போல அவன் ஆற்றங்கரையில் தோழர்களுடன் ஆடிப்பாடி சாவகாசமாகக் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

"உணவுண்டவுடன் வெளியில் ஓடிப்போய்விடாதே ! உன் தந்தையின் தோழர் எருமியூர் நாடரும் அவர் குடும்பமும் நம்மூர் விழாக்காண்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கிறேம் - அவர்கள் வரும்வேளையில் நீ வீட்டில் இல்லையென்றால் நன்றாயிராது !" என்றாள் அன்னை.

"ஹ!" என்றான் அலட்சியத்துடன். என்றாலும் வயிற்றில் ஒரு பந்து உருண்டது. நாடரின் குடும்பமென்றால்.... பொன்னங்கையும் வருகிறாளா என்ன ? மூன்று நான்கு வருடங்களுக்கு முன் அவள் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்ததும் இருவரும் இடைவிடாமல் தட்டாமாலை, சில்லு, புளியாமர விளையாட்டு என்று கூத்தடித்தது நினைவுக்கு வந்தது. இப்போது அப்படியெல்லாம் விளையாட முடியுமா என்ன ? அவன் இளவட்டமாக வளர்ந்து நிற்கிறானே... மீசைவேறு லேசாக அரும்பத்தொடங்கிவிட்டது ! 

முடிந்தவரை நன்றாக ஆடையுடுத்திக்கொண்டு குடுமியை இறுக்க முடிந்து கொண்டை போட்டுக்கொண்டான்(1). இருப்பதில் நல்ல வேட்டியாக பார்த்துக் கட்டிக்கொண்டான். அவளைப் பற்றிய எண்ணங்களைப் புறக்கணித்துவிட்டு உணவில் மனதைச் செலுத்த முயன்றான்.

(1) அந்நாளில் குடுமி - கொண்டை போட்டுக்கொள்வது பரவலான வழக்கத்திலிருந்தது

ஏறக்குறைய ஒரு நாழிகை கழித்து வாயிலில் அந்த வில்வண்டி வந்து நின்றது. நாடர்தான் ! வாயிலுக்கு அவனுடைய தந்தையார் ஆவலுடன் ஓடிச் சென்று வரவேற்றார். இருவருக்கும் முப்பது வருட நட்பு. 

"உள்ளேயே நின்றுகொண்டிருக்கிறாயே - வாயிலுக்குப் போய் அவர்கள் சாமான்களை வாங்கி உள்ளே வைக்க வேண்டியதுதானே !" என்று அதட்டினாள் அன்னை. அவன் மறுத்துவிட்டான். ஏனோ பொன்னங்கையைப் வாயிலுக்குச் சென்று எதிர்கொண்டு பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது - வெட்கப்படுகிறோமா என்ன ? சை ! அவர்கள் குடும்பத்தோடு வீட்டினுள் நுழைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பானகமும்கூட அருந்தியாகிவிட்டது. அவன் இன்னமும் புழக்கடைப் பக்கம் ஏதோ வேலையிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒளிந்துகொண்டிருந்தான்.

நாடர்தான் "எங்கே திதியன் ?" என்று முதலில் வினவினார். அது அவன் காதுகளிலும் விழுந்தது. நாடரின் தலையில் இடிவிழ ! நண்பர் எள் என்பதற்குமுன் எண்ணையாக நிற்பதுதான் தன் தந்தையின் வழக்கமாயிற்றே.. "ஏங்கேயடி - திதியனை வரச்சொல் !" என்று சொல்லிவிட்டார். வேறு வழியின்றி முற்றத்தை நோக்கி வளைந்து நெளிந்து நடந்தான். முடிந்தவரை தான் வெட்கப்படுவது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தாலும் அதை செயப்படுத்துவது எளிதானதாக இல்லை. ஒரு விதமாகக் கோணிக்கொண்டு தூணைப் பிடித்துக்கொண்டு நின்றான்.

"அட, இத்தனை உயரமா வளர்ந்துவிட்டான் !" என்று வியந்தார் நாடர். அவருடைய அகமுடையாள்(2) ஒருபடி மேலே போய் கையைச் சுற்றி நெற்றியில் முஷ்டியை மடக்கி திருஷ்டி கழித்தாள் !

(2) மனையாள்

அவனுக்கு சற்றே தைரியம் வந்து நிமிர்ந்து பார்த்தான். உடனடியாகத் தென்பட்ட நாடரை - நாடரின் மனைவியை - அவர்களுடைய மகனை - வேளக்காரனை - சடுதியில் புறக்கணித்து அதற்குப்பின் கண்களையோட்டினான்.

நாடரின் மனைவியின் தோள்பட்டைக்கருகில் மெதுவாக அந்த முகம் உயர்ந்தது.

முதலில் கருகருவென்று அடர்ந்த கூந்தல் தெரிந்தது. அடுத்து அந்தக் கருங்கூந்தலைப் பிளந்துகொண்டு தகதகவென்று நெற்றியில் வழியும் அழகான நெற்றிச்சுட்டி புலனாயிற்று. அப்புறம் தந்த நிறத்தில் நெற்றியும் அதன் நடுவில் இடப்பட்ட கருஞ்சாந்துப் பொட்டும்..... கண்களைப்பார்க்க தைரியமில்லாமல் நேராக மூக்கு பவளவாய் கழுத்து அதில் மணியாரம் என்று இறங்கிவிட்டு சற்றே நிமிர்ந்து அந்தக் கருவரியோடிய கண்களை சந்தித்த அந்தக் கணத்தில் - சொல்லி வைத்தாற்போல் அவளும் அவனை நோக்கினாள்.

அந்தக் கணத்தில்.... அதற்கடுத்த ஓரிரு கணங்களில்...

ஒரு மாயாஜாலம்போல அது நிகழ்ந்தது. அவனுக்கும் அவளுக்கும் அடுத்த அறுபது எழுபது வருடங்களுக்குத் தொடரப்போகின்ற அந்த இறுக்கமான பிணைப்பின் முதல் முடிச்சு அப்போது விழுந்தது.

அவன் அவளைக் கண்டுகொண்டான். அவளும் அவனைக் கண்டுகொண்டாள். அவர்கள் அப்போதுதான் முதன்முதலில் சந்திக்கிறார்களா ? அல்லது ஜென்ம ஜென்மங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் - மரங்களாக, பறவைகளாக, ஊர்வனவாக, நடப்பனவாக - அவர்கள் முன்பே சந்தித்திருக்கிறார்களா ? அந்த ஆழமான அன்பின் பிணைப்பு அந்த ஒரு கணத்தில் விழுந்து விட்டதை வேறு எவ்வாறு விளக்க முடியும் ?

அந்தக் கணத்தில் அவள் தன்னிலை மறந்தாள் - தன் நாமம் கெட்டாள் - அகன்றாள் தன் அகம்விட்டு.

அவனும் அவளைத் தன் சிந்தையில் நிரப்பிக்கொண்டான். காதலானான். கசிந்தான்.

காலம் அவர்கள் காதலைக் கனியவைக்கும். இருட்டை - பிரிவை - அது நீராகக் கொண்டு மரமாகி வளரும். அவர்கள் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி மகிழ்வார்கள். மீண்டும் அவர்கள் இந்தப் பூமியிலோ பிரபஞ்சத்தின் வேறு ஏதாவது மூலையிலோ பிறக்கலாம். அப்போதும் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறேனும் அடைவார்கள். 

இணைவார்கள்.

காதலாகிய களவொழுக்கத்தின் இயல்பை உரைத்து களவியலைத் துவங்கும் தொல்காப்பியர், அடுத்ததாக தலைவன் தலைவியை எதனால் சந்திக்க நேர்கிறது - காதல் அவர்களுக்குள் என்ன காரணத்தினால் முகிழ்க்கிறது என்று விளக்க முற்படுகிறார்.



"ஒன்றே வேறே என்று இரு பால் வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப.
மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே.

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - களவியல் - எண் 1036)


என்ன சொல்கிறார் தெரியுமா ?

"கூடியிருக்கும்படியும் பிரிந்திருக்கும்படியும் செய்யும் இருவகைப்பட்ட ஊழ்வினையிடத்து, இருவருடைய உள்ளமும் ஒன்றியிருக்கும்படி செய்து அதனால் அன்பு உயர்வதற்குக் காரணமான நல்லூழின் ஆணையினால், ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்படுவர். தலைவன் தலைவியைக் காட்டிலும் உயர்ந்த நிலைமையில் இருக்கும்படியாக நேரிடினும் தலைவியை நீக்கும் நிலைமை ஏற்படாது"

இதில் பால் என்பதை ஊழ்வினை என்கிற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். ஊழ் என்பதற்கு பழைய கன்மம், விதி, தம்மை மீறிய சக்தி என்றெல்லாம் பொருள். பண்டைய தமிழரின் பலமான நம்பிக்கைகளுள் இதுவும் ஒன்று. வள்ளுவரே ஊழைப் பாடியிருக்கிறார்.

ஊழ்வினையின் ஆணையினால்தான் தலைவனும் தலைவனும் சந்திக்க நேர்கிறது என்கிறார். வேறு எவ்வாறு இதை விளக்குவது ? வாழ்வில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். அத்தனை பேருமா நம்மிடம் மகரந்தப் புணர்ச்சி செய்கிறார்கள் ?

இதில் "ஒத்த" என்கிற வார்த்தை மிக மிக அழகானது. ஒத்தவர் சந்திக்கிறார்கள். அதாவது ஒருவரை ஒருவர் முன்பே அறிந்தவர்கள், உறவு கொண்டவர்கள், பிரபஞ்சச் சங்கிலியில் இரு அடுத்தடுத்த கண்ணிகளாக இணைந்தவர்கள் - சந்திக்கிறார்கள். அந்த முந்தைய உறவின் பலத்தால்தான் "கண்டதும் காதல்" அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நிலையில் அவர்களுடைய தனிப்பட்ட உலகத் தகுதிகள் - உயர்ந்தவர் / தாழ்ந்தவரென்ற பாகுபாடுகள் - பொருளாதார / சமூக வேறுபாடுகள் - அர்த்தமிழந்து விடுகின்றன.

"காண்ப" - அவர்கள் சந்திப்பார்கள். சந்தித்தாக வேண்டும். உலகத்தின் இருவேறு மூலைகளில் இருந்தாலும் அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
ஏனெனில் அதுவே விதி. இயற்கை இட்ட ஆணை.

தலைவன் தலைவியின் முதல் சந்திப்பை இதனைவிட அழகாக விளக்கிவிட முடியுமா என்ன ?