வெள்ளி, 19 ஜனவரி, 2018

செல்வச் சந்நிதி ஆலயம்

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
 கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கிறது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள். இவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.
ஆகம விதிகட்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகிறது. இங்கே முருகன் ''பூரணம்'' என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கிறார் இதைக்கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி 'செல்வச் சந்நிதி மேவிய பூரணனே' என்றும், 'செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே' என்றும், 'பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்' என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார். சின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும்.
இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூகவரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு. இங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடபட்ட தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன்சங்கமிக்காது 'வல்லிநதி' என்னும் பெயருடன் மிளிர்ந்தது.

ஆலயத்தின் ஆரம்பகால தோற்றம்.
வீரவாகுத்தேவர் காலடி பதித்த இடம்.
கந்தர்வரான ஐராவசு வழிபாடுசெய்த இடம் (பூவரசமரம்)
இதற்குச்சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லை வெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகிறது. இந்; நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது அரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன் நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது. இவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. ஆதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் 'உப்பு மால்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.        

நல்லூர் கந்தசுவாமி கோவில்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு அல்லது புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா
திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும்வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின்திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர்இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.

யாழ்ப்பாணம்






சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார்.
l சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில் உயர் கல்வி பயின்றார். தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார். சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்.
l யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.
l வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.
l சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.
l சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.
l தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.
l ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவேண்டி இருந்தது. ஆங்கிலத்தில் பேச முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து, தமிழிலேயே பேசுமாறும், அதை நீதிமன்ற அதிகாரிதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறவேண்டும் என்றும் கூறினார்.
l உடனே நாவலர், ‘‘அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’’ என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறிவிட்டார். ‘சரி சரி, ஆங்கிலத்திலேயே கூறுங்கள்’ என்று நீதிபதி சொல்ல, மறுத்த நாவலர், ‘சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்று தெரிவித்தாராம்.
l 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் பெருமான் 57-வது வயதில் (1879) மறைந்தார்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்வது ஒருகுற்றமா?


நமது அன்றாட வாழ்க்கையில் பால் மிக இன்றியமையாதது.. நமது குழந்தைகள் சிறிதளவேனும் ஆரோக்கியமாக இருப்பது பசும் பாலினாலையே.. தற்போது பால் உற்பத்தி குறைவினால், பல கலப்படங்கள் பாலில் வந்துவிட்டன.. ஏற்கனவே அரிசி முதற்கொண்டு, காய்கறிகள், மளிகை பொருட்கள் என அனைத்திலும் ரசாயன கலவைகள்.. அடிப்படை தேவையான தண்ணீரும் வற்றிய நிலை அல்லது சுத்திகரிப்பு என்ற நிலையில், அதன் சத்துக்கள் வடிகட்டப்பட்டு தான் குடிக்கின்றோம்.. இதனாலையே முன்னோர்களின் சாராசரி வயதான நூறிலிருந்து குறைந்து, தற்போது அறுபது வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதே பெரும்பாடு..
உழுவதற்கு தான் தற்போது டிராக்டர் உள்ளதே, பிறகு காளை மாடு எதற்கு என்று சிலர். ஏழை விவசாயிகளுக்கு இன்றும் பல இடங்களில் உழுவதற்கு மாடுகளே உதவியாக உள்ளன. மற்றும் காளை மாடுகள் அன்றி அந்த இனங்கள் எப்படி உற்பத்தியாகும்? அடிப்படை விசயம் இது..
செருப்பிலும் இடுப்பு பெல்டிலும் உபயோகப்படுத்தும் பொழுது மட்டும் தெரியவில்லையா என்று சிலர்.. தற்போதெல்லாம் மாட்டுத்தோலை விட ரப்பரும் ரெக்ஸின் என்னும் மூலப்பொருளே அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.. அப்படி தோளினால் செய்யப்படுவதை தவிர்ப்பதும் நல்லதே.. இறைச்சியையே சாப்பிட வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. மாட்டிறைச்சியையாவது சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்று தான் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. இதனை சொல்லாமல் இருந்திருந்தால் கூட பல மாடுகள் பிழைத்திருக்கும் போல. சில மூடர்கள் எதைக் கூறினாலும், எதிராகத்தான் செய்வோம் என்று, வீம்புக்காகவே மாட்டிறைச்சியினை சாப்பிட்டு, அதனை புகைப்படமாக வெளியிடுகிறார்கள்.. தற்கொலை செய்துக் கொள்வதும் தவறு என்கிறோம்.. அவர்கள் அதற்கு எதிர்மறையாக செய்யட்டும்.. முடிந்தவரை மாட்டிறைச்சியை புறக்கணியுங்கள்..
ஒருவேளை இந்தியாவில் நாய் மாமிசம் உண்ணப்பட்டு, மேலும் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அதை தடுப்பார்களா அல்லது உரிமை என்பார்களா? மாடுகள் மனிதர்களின் உணவென்று யார் சொன்னது? அது உணவு என்றால் அதை உண்பதால் ஏன் நோய்கள் வருகின்றன? ஏன் அதை உண்பவர்கள் அசுரகுணம் உடையவர்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்கள். ஏனோ? பசுக்கள் அதிக உணர்வுகள் உடையவை. கோபம், துக்கம், பகைமை, பாசம், மகிழ்ச்சி என பல்லுணர்வுகள் உடையவை. ஒருவர் நம்மை கொல்ல வந்தால் நமக்கு என்னவெல்லாம் உணர்வு ஏற்படுமோ அத்தனையும் மாடுகளுக்கும் ஏற்படும். ஒரு மாட்டை தின்னும் போது அதன் இறைச்சியை மட்டும் நாம் தின்பதில்லை, மாறாக அதன் உணர்வுகளையும் சேர்த்தே உள்வாங்குகிறோம். கொல்லப்படும் பசு பகைமை உணர்வோடும் வெறுப்போடும் இருக்கும். அதன் ஹார்மோன்களை நாம் உள்வாங்குதல் நமக்குள்ளும் வெறுப்பு, பகைமை, வெறி, ஆவேசம், பயம் போன்ற பல எதிர்மறையான குணங்கள் மனத்துள் குவிகின்றன. இதுவே மாட்டை தின்பவர்களை பயங்கரவாதிகளாக ஆக்குகின்றன.
மாடுகளின் மேன்மையைப் பாராட்டி விழா எடுக்கும் நாட்டில் அதை கொன்று தின்பது தர்மமா? தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!
இந்துமதத்தை தூய வடிவில் தெரிந்து கொள்ள இந்த page யை like செய்யவும்.
(நிலை தடுமாறி சென்றுள்ள நமது சொந்தங்களை தாய்மதத்திற்கு திரும்ப அழைப்பது ஒவ்வொரு இந்துவின் கட்டாயக் கடமை )

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா?


ஆலயங்களில் இவ்வாறுதான் பூஜை செய்யவேண்டும்; அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிக்கவேண்டும்; அபிஷேக ஆராதனை செய்யவேண்டுமென்று ஆகமங்கள் வரையறுத்துக் கூறியுள்ளன. அதனால் தெய்வங்களுக்குப் பயனுண்டா என்றால், அவர்களுக்கு எதுவுமில்லை. முறையாகச் செய்யவில்லையென்றால் நமக்குதான் வளர்ச்சி தடைப்படும். இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவன் படைத்த உயிர்களாகிய நாம்தான் அவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். அதற்கான பிரபஞ்ச சக்தி ரகசியங்களை உணர்ந்த முனிவர்களும் ஞானிகளும்தான், நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள் வதற்கான வழிமுறைகளை ஆகமங்களாக எழுதிவைத்தனர். அவற்றை சந்தேகத்திற் கிடமின்றி பின்பற்றவேண்டியது நமது கடமை.
"பூர்யந்தே சர்வ கர்மான்; ஜாயந்தே ஞானம் ஆத்மனே' என்பார்கள். அதாவது நாம் முறைப்படி செய்யும் வழிபாட்டால், அனைத்து தேவைகளும் நிறைவாக்கப்படுகின்றன. நம் ஆத்மாவுக்கு கடவுளைப் பற்றிய அறிவு, நம்மை சுற்றியிருப்பவர்களைப் பற்றிய அறிவு, நம்மைப்பற்றிய அறிவு உண்டாகின்றது. இதில் தன்னைப் பற்றிய அறிவு கண்டிப்பாகத் தேவை. நம் அறிவு தெளிவாக இருந்தால் எதிலும் குழப்பமில்லை.
சிலர் பூஜையெல்லாம் எதற்கு? தியானம் செய்தால் போதுமென்று சொல்வார்கள். ஒரு கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரை பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு படித்துமுடித்த ஒருவன் அதுவே பெரிய கல்வியென்று நினைத்துக்கொள்வதுபோலதான் இதுவும். அதற்குமேலும் பல உயர்நிலைக் கல்விகள் உள்ளன. பலர் தாங்கள் அறிந்தவற்றையே பிரதானமாகக் கருதி மற்றவற்றை நிராகரிக்கிறார்கள்.
பூஜை செய்வதில் அர்ச்சகர்களுடைய பொறுப்பு மிக முக்கியமானது. "கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையில் இவர்கள் எதற்கு' என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அர்ச்சகர்களின் கடமை மிக உயர்வானது. பொருளாதாரத்துக்காக செய்யப்படுவதல்ல இது. பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் வேறு எந்தத் தொழிலாவது செய்யலாம். இறைசேவை அப்படியல்ல. அர்ச்சகர்களுக்கு மரியாதை செய்வதற்கு- பக்தர்கள் பொருள் கொடுப்பதற்கு சம்பாவனா என்று பெயர். பாவனை என்றால் எண்ணம்; சம் என்றால் நல்லது. நல்ல எண்ணத்துடன் கொடுப்பது சம்பாவனை. "இவர் எனக் காகவும் என் குடும்பத்திற்காகவும் பூஜை செய்கிறார்; அனைவரது நலனுக்காகவும் பூஜை செய்கிறார்' என்னும் நல்ல எண்ணத் துடன் சம்பாவனை தரவேண்டும். தர்ப்பணம் செய்தாலும்கூட அனைவருக்காகவும் செய்கிறார்கள். எனவே அவர்களைப் பாதுகாக்கவேண்டியது சமுதாயத்தின் கடமை. அனைவரின் நன்மைக்காக பூஜை செய்வதால்தான் இவர்களுக்கு அர்ச்சகர்கள் என்று பெயர்.
ஓதுவா மூர்த்திகள் என்று சொல்கிறோம்.
தமிழில் மிக அற்புதமாக இறைவனைப் பாடுவார்கள். அவர்கள் இப்போது பெருமளவில் இல்லை. குறிப்பிட்ட தினங்களில் வந்து பாடிச்செல்கிறார்கள். ஒருசில ஆலயங்களைத் தவிர பல ஆலயங்களில் ஓதுவா மூர்த்திகள் நிரந்தரமாக இல்லை. ஏன்? அவர்களை முறையாகப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். அவர்களையெல்லாம் ஊக்குவிக்கவேண்டியது சமுதாயத்தின் கடமையாகிறது. ஆலயம் சார்ந்தவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
அது குறைந்துவிட்டால் அவர்களுக்கோ அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் களுக்கோ பாதிப்பில்லை. அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்று விடுவார்கள். அப்படி ஆலயப் பணி செய்பவர்கள் இல்லாது போனால் சமுதாயத்திற்குதான் பாதிப்பு.
எனவே அர்ச்சகர்கள், ஓதுவா மூர்த்திகள், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை நாம் பாதுகாக்க வேண்டும். "ஒரு மணி நேரம் ஊதுவதற்கு ஐந்தாயிரமா' என்று கேட்கிறவர்களைப் பார்க்கிறோம். கல்யாண மண்டப வாடகையே ஐந்து லட்சம் கொடுக்கிறார்
களல்லவா? சிவனுடைய லீலை என்கிறோமே- அதுபோல, அவனருளால் இவையெல்லாம் மாறி நல்ல நிலைக்கு வருமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
சுவாமிக்கு பாலாபிஷேகம், தயிரா பிஷேகம் போன்றவை செய்கிறோம். பல ஆலயங்களில் அவை கோமுகி வழியே சென்று வீணாவதைக் காண வேதனையாக உள்ளது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அவை புனிதமானவை. நிர்மால்யம் என்று சொல்வோம். மலம் என்றால் அழுக்கு; நிர்மால்யம் என்றால் அழுக்கற்றது; தூய்மை செய்யப்பட்டதென்று பொருள். பொதுவாக சிவார்ப்பணம் என்று சொன்னாலே ஒரு பொருள் நிர்மால்யமாகிவிடுகிறது. எனவே அவற்றை வீணாக்காமல் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கும் கடமையை ஆலய அறங்காவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நிர்மால்யத்தை ஏழைகளுக்கோ பக்தர்களுக்கோ கொடுப்பது தவறல்ல. சாஸ்திரப்படி இதை சிவாச்சாரியார்களே செய்யவேண்டும். குருக்கள், சிவாச்சார்யார்களையெல்லாம் ஆதிசைவர் என்பார்கள். அனாதி சைவன் என்பவர் சிவபெருமான். அவர் ஆதியும் அந்தமும் அற்றவர். அதுபோல பாரசைவர் என்றும் உண்டு. இவர்களைப் பண்டாரம், லிங்காயதர் என்று சொல்வார்கள். கிராமப்புறங்களில் பார்க்கலாம். அதுபோல பட்டாச்சார்யார்கள், குலதெய்வ- சிறுதெய்வ பூசாரிகள் என்று இறைவனுக்குப் பூஜை செய்வோர் பலருண்டு. அவரவர் மரபுப்படி அவர்கள் பூஜைகள் மேற்கொள்வார்கள். அவர்களெல்லாம் நலிவடைந்துவிடாமல்- வேறு தொழிலுக்கு மாறிச் சென்றுவிடாமல் காப்பாற்ற நாம் முயலவேண்டும்.
ஆலயம் என்பது சமுதாயத்துக்கானது. சமுதாயத்தை ஒன்றிணைப்பது. எவரும் பசியின்றி வாழவேண்டுமென்பதே நமது ஆன்மிகத்தின் அடிப்படை. பசியின்றி வாழ்பவனே உறுதியுள்ளவனாக
வும் தன்னம்பிக்கையுள்ளவனாகவும் இருப்பான். அப்படிப்பட்டவர்களைக் கொண்ட சமுதாயத்தில் நல்லறம் தழைத்தோங்கும். பசியோடு யாரொருவர் இருந்தாலும் அது அந்த நாட்டுக்கு சாபம்தான். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரனைக்கூட அவர்கள் பார்க்கவில்லை. அப்போது அவர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கவேண்டுமென்று முடிவெடுத்தார் கள். நமது தாய்மொழியைவிட ஆங்கில மொழியே உயர்ந்ததென்று நாம் கருதச் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். அதில் பெருமளவில் வெற்றியும் பெற்றார்கள். நம்மிடையே ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாலும், ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையானதாலும் மூன்று நூற்றாண்டுகளுக்குமேல் நாம் அவர்களுக்கு அடிமையானோம். நமது கலாச்சாரத்தை தவறவிட்டதும் அதற்கொரு காரணம்.
வேட்டி கட்டிச் செல்வதைக்கூட பரிகசிக்கும் நிலையும் இருந்தது. தற்போதுகூட சில இடங்களில் அந்த நிலை உள்ளது. ஆனால் வெளிப்படையாக செய்யமுடியாத அளவுக்கு சட்டமியற்றப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம். நாம் ஆலயத்துக்குச் செல்லும்போது வேட்டி கட்டிச்செல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். "வேஷ்டம்' என்றால் சுற்றிக்கொள்வது. அதிலிருந்து உருவான சொல்லே வேட்டி.
சிலர் அபிஷேகத்துக்கு பால் வாங்கித் தருவார்கள். கூடுமானவரை தூய்மையான பசும்பாலை வழங்குவது நல்லது. அபிஷேக சமயத்தில் திரை மூடியிருக்கும் நேரத்தில் எட்டிப்பார்ப்பது கூடாது. பிரார்த்தனையும் செய்யக்கூடாது. அவசியம் மணி ஒலிக்கவேண்டும். அபிஷேக நேரத்தில் பிரதட்சிணம் செய்யக்கூடாதென்பதும் சாஸ்திரம் விதித்திருக்கும் கட்டுப்பாடு. இவற்றையெல்லாம் கடைப்பிடித்து பக்திசெய்தால், இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறுவது உறுதி.

தீபாவளியும் சைவத்தமிழருக்கு உரிய சைவப்பண்டிகையே!!!




இன்று பலர் தீபாவளியை ஆரியர் பண்டிகை என்றும் தமிழர் கொண்டாடக்கூடாதென்றும் அசூரரான தமிழரை கண்ணன் கொன்றநாள் என்றும் கூறுகின்றனர். தமிழன் செத்தநாளை தமிழர் கொண்டாடலாமா என்று கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர்!!!! என்னே அறிவீனம்!!!!!!!! இது மிசனரிகளின் சதி!!! நெற்றிமுழுக்கப் வெண்பூச்சு,சிவப்பு பூச்சுக்கள் அணிவது தமிழர் பண்பாடு. அதை இந்தியாவிலுள்ள அனைந்து வைதீகமதத்தினரும் பின்பற்றுகின்றனர்! அவர்கள் யாரும் இது தமிழர் பண்பாடென்று இதனை ஒதுக்குவதில்லை.
சிவவழிபாடு சிந்துவெளித் தமிழரின் வழிபாடு. அதனையாரும் சிந்துவெளி தமிழரின் வழிபாடென்று ஆரியர் கூறுவதில்லை.



மாயோன் மேய காடுறை உலகமும் - தொல்காப்பியம் திருமால் வழிபாடு தென்னாட்டில் முல்லைநிலத் தமிழரின் நிலவிய வழிபாடு. அதனையும் ஆரியர் தமிழருடையதென்றுகூறி கைவிட்டிலர். கண்ணன் சங்ககாலத் தமிழ்நூல்களில் போற்றப்படுகின்ற ஓர் தெய்வம். திருமாலின் அவதாரமாக சொல்லப்படும் தெய்வம். கரியநிறத்தவன் என்று வைதீகசமய நூல்கள் அனைத்தும் சொல்கின்றன. எனவே அவன் தமிழ்த் தெய்வம் என்பதில் என்ன ஐயம்??? எனவே தமிழ்த் தெய்வமான கரியநிறக் கண்ணன் அசூரனை அழிப்பதில் என்ன தலையிடி உருவாயிற்று இந்த மேதாவித்திராவிடர்களுக்கு???? சரி! அசூரன் என்றால் தமிழன் என்ற இவர்களின் அடுத்தவாதத்துக்கு வருவோம்!!! காகாசூரன் - இந்திரனின் மகன் இராமரின் பிரம்மாஸ்திரத்துக்கு தனது கண்ணைப் பறிகொடுத்தவன்.இந்திரனின் மகனுக்கும்(தேவருக்கும்) அசூரன் என்று பெயர் உள்ளதே? தேவர் ஆரியர் என்னும் வாதம் நியாயமெனின், அவர்களுக்கு அசூரர் என்று பெயர் எங்கனம் பொறுந்தும்? அசூரர் என்றால் தீயசிந்தனை உடையவர் என்றும் தேவர் என்றால் நற்சிந்தனை உடையவர் என்றும் பொருள். அவ்வளவே!!!! சிவபெருமானை மதியாது, தட்சனின் யாகத்தில் பங்குபற்றிய தேவர்கள் வாங்கிய அடியும் உதையும் சிந்துவெளித் தமிழரின் சிவனுக்குக் கீழ்த்தான் தேவர்கள் என்பதை வைதீகம் ஏற்றதன் விளைவு என்பதை இந்ததிராவிடமேதாவிகள் உணர்வார்களா? சைவசமயப்படி, தேவர்கள் என்போர் புண்ணியபலத்தால் தேவபதவிகளைப் பெறுபவர்கள். ஆனால் அவர்களுக்கும் மலபந்தம் உண்டு. இரகுமன்னன் (இராமனின் முன்னோர்) இந்திரனை வென்றதை இந்த மிசனரிகளின் ஆட்டுவிப்பால் ஆடுகின்ற திராவிடமேதாவிகள் எந்த ஆரிய திராவிடக் கதைக்குள் உட்படுத்துவார்களோ சிவசிவ!!! ஆரியவீட்டுச் சகோதரச் சண்டை என்பார்களோ???? மனிதர்கள் தேவரை வணங்குவதாகவும் தேவர்களுக்குப் பயந்தவர்களாகவுமே வேதமந்திரங்கள் உள்ளன. இங்கு வேதம் ஆரியர் நூலாயின், அதில் ஆரியர் தம்மை மனிதராகவே குறிப்பிடுகின்றனர். அவர்கள் தேவர்களுக்குப் பயந்தவர்களாகவே, தேவர்களை வழிபடுபவர்களாகவே கருதப்படுகின்றனர். மனிதர்களே, வேள்விகளில் இந்திரனையும் அக்கினியையும் போற்றுங்கள். -ரிக்வேதம் மண்டலம் 1 - 21 - 2 (உருத்திரன்)அவன் எங்களுடைய குதிரைகளுக்கும்,செம்மறிகளுக்கும்,செம்மெறிக் கடாக்களுக்கும்,மனிதர்களுக்கும், பெண்களுக்கும்,பசுக்களுக்கும் இனிமையாய்த் தோன்றும் சுகத்தைத் தருவானாக. -ரிக் வேதம் மண்டலம் 1 - 43 - 6 தேவர்களான மித்திரனும் வர்ணனும் அர்யமானும் ஆதியான தூதுவனான உன்னை(அக்கினியை)எழுப்புகின்றார்கள். - ரிக்வேதம் மண்டலம் 1 - 36 - 4 ஈவிரக்கமற்று கொலைத்தொழிலைச் செய்யும்போது தேவரையும் அசூரன் என்றநிலையில் இருப்பதாகவே வேதம் உரைக்கின்றது. அசுரனான வருணனே! உன்னுடைய வேள்வியில் தீமை செய்பனை எந்தப் பயங்கர ஆயுதங்களால் நீ அழிக்கின்றாயோ அவற்றால் நீ எங்களைத் துன்புறுத்தாதே. நாங்கள் ஒளியிலிருந்து புறத்தே செல்லாதிருப்போமாக. நாங்கள் வாழ துஷ்டர்களை விலக்கவும். - ரிக் வேதம்.மண்டலம் 2 - 28 - 7 எனவே, தேவர் என்பவர் வேறு. மனிதர்(ஆரியர்) என்பவர் வேறு. இது தெளிவாகின்றது.அத்துடன் அசூரர் என்பவர் தீமைசெய்பவர் என்ற பொருளிலேயே வேதத்தில் உள்ளது. இங்கு அசூரர் என்றால் திராவிடர் என்பது திராவிடமேதாவிகளின் மிசனரிக் கண்டுபிடிப்பு!!!!! சரி, நரகாசூரனுக்கே வருவோம்!!! அவன் தமிழன் என்பதற்கு இவர்கள் வைக்கும் ஒரேவாதம் "அசூரன்" என்பதுதான்!!! அதுதவிர வேறெந்த வரலாற்று,இலக்கிய ஆதாரமும் இல்லை. ஏற்கனவே யாம் இங்கு விளக்கியதுபோல், கரியநிறத் தமிழ்த் தெய்வமான கண்ணனின் துணையோடு, சத்தியபாமா நரகாசூரனை வதைக்கின்றாள். இங்கு சத்தியபாமா பூமாதேவியின் அவதாரம். நரகாசூரனோ பூமாதேவியின் மகன். பூமாதேவி திருமாலின் மனைவி. எனவே, இந்த திராவிடமேதாவிகளின் கதைப்படி பார்த்தால், ஆரியர் ஆரியரின் மகனை அல்லவா அழித்துள்ளனர்!!!! அதற்கு தமிழர் ஏன் கவலைப்படவேண்டும்!!!! ஆரியத் தாயும்(?? ஆரியந் தந்தையும் (?) சேர்ந்து உலகுக்கு அட்டூழியங்களைச் செய்த தமது மகனை அழித்துள்ளனர். இது பாராட்டப்பட வேண்டிய விடயம்தானே!!!!! முல்லைநிலக் கடவுள்,கரியநிறம் என்பவற்றை வைத்துப்பார்த்தால், தமிழ் கண்ணனும் அவரது மனைவியும் இணைந்து உலகுக்குக் கொடுமைசெய்த பிரகஜோதிஷம் என்னும் வங்கதேசத்தை ஆண்ட தமது மகனை அழித்துள்ளனர். உலக நன்மைக்காக, தமது மகனையே வதைத்த வீரத்தமிழர்களை பாராட்டவேண்டியது தமிழர் கடமைதானே!!!! இதில் திராவிடமேதாவிகளுக்கு என்ன தலையிடி வந்தது!!!!!! பிரம்மதேவனிடமே நரகாசூரன் தன்னைத் தன் தாயைத்தவிர வேறுயாரும் கொல்லக்கூடாதென்ற வரத்தைப் பெற்றான். இந்தத் திராவிடமேதாவிகளின் திராவிட நரகாசூரனுக்கு ஆரியப் பிரம்மதேவன் வரங்கொடுத்தான் என்றால், ஆரியர்கள் கொடையின் வடிவம் என்றல்லவா பொருள்கொள்ள வேண்டும்!!!!!! தீபாவளியைப் போல், இராமனையும் ஆரியன் என்று திராவிடமேதாவிகள் உரைப்பர். இராவணனைக் கொன்ற இராமனும் கரியனாகவே இராமாயணம் கூறுகின்றது. எனவே திராவிடமேதாவிகளின் நிற தத்துவப்படி இராமனும் தமிழனே!!!!! இராமாயண காலம், ஆரியர் குடியேற்றக்காலத்திற்கு முற்பட்டது. எனவே இராமாயணத்தில் கரிய இராமன் இராவணனை வதைத்ததில் என்னதான் இந்தத் திராவிடமேதாவிகளுக்கு இடைஞ்சலோ??? எனவே, இதிலிருந்து நாம் திராவிடமேதாவிகளின் ஆரிய-திராவிட மோட்டுவாதங்களின் வெறுமையை உணரலாம். சரி, இது சைவர்களுக்குரியதா? கண்ணன் வைணவக் கடவுளாயிற்றே!!! சைவர்கள் கொண்டாடின் சைவக்கற்பு என்னாவது? இப்படியும் சிந்திப்போர் உண்டு. இராமன்,கண்ணன்,திருமால் என்னும் தெய்வங்கள் அனைத்தும் சைவக்கடவுளர்களே. அதில் சைவர்கள் குழம்பாது இருக்கவேண்டியது சைவர்களின் கடமை. கண்ணன்,இராமன்,திருமால் மூவரும் வீபூதிதாரணர் என்றே வேதங்களும் உபநிடதங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. திரிசூலம் என்னும் வலைத்தளத்தில் கண்ணன்,இராமன், திருமால் மூவரும் வீபூதிதாரணர் என்பதை விளக்கி மூலநூல்களின் ஆதாரத்துடன் கட்டுரை உள்ளது. படித்துப் பயன்பெறுக. அதிலிருந்து சில உதாரணங்களை நான் இங்கு தருகின்றேன். இராமர் வீபூதிதாரண சிவபக்தர் //////“க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : ” என்று கூறுகிறது வால்மிகி ராமாயணம். இச்சுலோகத்தின் பொருள் : “பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார் ” “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும், அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ” என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள்./////// -நன்றி -திரிசூலம்



கண்ணன், திருமால் வீபூதிதாரண சிவபக்தர்கள் ///////மகாபாரதம் ஆதி பர்வம்,அத்தியாயம் 241 : “கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி ...." வனப் பர்வம்: i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ” ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’ துரோணப் பர்வம் : i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘ ii)அத்தியாயம் 202 :‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’ ‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’ கர்ணப் பர்வம் : i)அத்தியாயம் 21 : ‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’ ii)சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 : ‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ ‘///////// -நன்றி -திரிசூலம் கண்ணன் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்றதாக மகாபாரதம் கூறுகின்றது. மேலும் சிவகீதை(பத்மபுராணத்தில் உள்ளது)யில் இராமர் அகத்தியரிடம் சிவதீட்சை பெற்று, திருநீறை உடல்முழுதும் பூசி, இராவணனை வெல்வதன்பொருட்டு பசுபதாஸ்திரம் பெறுவதற்காக, பாசுபதவிரதம் இருந்தார் என்கின்றது. திருமால் தனக்கு சக்ராயுதம் வேண்டி, சிவபெருமானுக்கு தனது கண்ணையே தாமரையாக அர்ப்பணம் செய்த சிவபக்தர் என்று சைவசமயம் கூறுகின்றது. மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் - திருப்பல்லாண்டு



இராமனுஜரின் வைணவதாபனத்திற்குப் பிற்பாடே, தனிமதமாக வைணவம் வளரும்போது வீபூதிக்குப்பதிலாக நாமம்போடும் முறையை வைணவம் ஏற்படுத்தியது. அது வைணவர்களின் சமயவிருப்பு. ஆனால் மூலநூல்களின்படி அவர்கள் சைவதெய்வங்கள்.சிவபக்தர்கள். /////உடையவர் சூர்ண விளக்கம் எனும் வைணவ சுவடி கூறுகிறது, “ஸ்ரீ பெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த ஸ்ரீ சூர்ண மேது காண் ” .மேலும்,வடகலைக் குருபரம்பரை கூறுகிறது ,”சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .ஆக,ராமானுஜர் தாண்,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,திருமண்ணை அறிமுகப்படுத்தியவர் என்று நமக்கு புலனாகிறது..ஆக,ராமானுஜருக்கு முன் வாழ்ந்த ராமர்,கிருஷ்ணர் எல்லோரும் திருமண்ணையா அணிந்திருப்பார்கள் ??///// -நன்றி -திரிசூலம் ஒருவனே மூவர் என்றும் ஒன்பது தினமும் அன்பால் பரமனை அருச்சித்தாரும் பாம்பு அணைப் பள்ளி வள்ளல் புரம் அது பொருந்தி வாழ்வர் போக பேதங்கள் பொங்க அரியன் யாவும் இல்லை அவர் தமக்கு அமலனால் ஏ. - சிவதருமோத்திரம் (சைவ உபாகம நூல்) சம்புபட்சமாய் உள்ள பிரம்மா,திருமாலையும் அரனோடு சேர்த்து மூவரையும் ஒருகடவுளாகக் கருதி , சிவபெருமானை ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாகப் பூசிப்பவர்கள் வைகுண்டப்பதவி பெறுவர் என்கிறது சைவ உபாகம நூல். அதாவது சம்புபட்சம்,அனுபட்சம் என்று இருவகை பிரம்மா, விட்ணுக்கள் உண்டு. அனுபட்சம் என்றால் ஆன்மாக்கள் பெறும் பதவிகள். சம்புபட்சம் என்றால் சிவபெருமானே எடுக்கும் வடிவங்கள். அவதார தெய்வங்கள் அனுபட்சமே. கண்ணன்,இராமர் என்பவர்கள் சைவத் தேவர்கள். பாம்பு அணைப் பள்ளியானை பழமொழி பகர்ந்த பாவி கோம்பி ஆய் உதர அங்கி கூர்ந்திடக் குலையும் அன்றே - சிவதருமோத்திரம் (சைவ உபாகம நூல்) பாம்பிலே பள்ளிகொள்ளும் நாராயணனை இழிவாகப் பேசியவன் ஓணானாய்ப் பிறந்து வயிற்றிலே தோன்றும் தீயால் உடல்குலைந்து நிற்பான் என்று சைவ உபாகமநூலான சிவதருமோத்திரம் உரைக்கின்றது. எனவே நாம் சைவத்திருமாலை சம்புபட்சமாகக்(சிவவடிவாக) கருதி வழிபடின் வைகுண்டவாசம் அதன்பலனாய்க் கிட்டும் என்பது தெளிவு. ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் - காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி(பதினொராந் திருமுறை) தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும், சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து -வைணவ நாலாயிர திவ்யபிரபந்த பாசுரம்(பேயாழ்வார் )



சைவநூற்களில் சொல்லப்படுகின்ற திருமாலுக்கு வலப்பாகம் அளித்த எம்பெருமானின் அருட்செயல் வைணவ நூற்களில் இல்லை. எனினும் வைணவ ஆழ்வாரான பேயாழ்வார் திருப்பதியில் சைவத்திலுள்ள இவ்வருட்செயலை உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடாக தமது பாசுரத்தில் சிவபெருமான் பாதியாகவும் திருமால் பாதியாகவும் தமக்கு வெங்கடேசப் பெருமாளின் காட்சி தோன்றியதாகப் பாடுகின்றார். எனவே வைணவப் பேயாழ்வார் உணர்ந்தவாறு, சைவநூற்களின்படி, சம்புபட்ச திருமால் சிவவடிவமே. அவ்வாறான சம்புபட்சமே சிவபெருமானின் நவதருபேதங்களில் ஒன்றாய் சைவம் கூறுகின்றது. கண்ணன்,இராமன்,அனுபட்ச திருமால் போன்றவர்கள் அனுபட்ச வடிவங்கள் (ஆன்மாக்கள் பெறும் பதவிகள்) சிவபக்தர்கள். சிவபெருமானால் அதட்டிக்கப்பட்டு, காத்தற்தொழிலையும் ஏனைய தொழில்களையும் செய்பவர்கள். வீபூதிதாரணர்களான அவர்களும் சைவர்களே. எனவே, இராமர்,கண்ணன்,அனுபட்ச திருமால் ஆகியோரை வீபூதிதாரண சிவபக்தர்களாகக் கருதி, சிவபக்தர்களுக்குரிய மரியாதையை வழங்கவேண்டியது நம்கடமை. மேலும், சைவத்தில் திருமால் உமையம்மையின் அண்ணன்.எனவே, சம்புபட்ச அனுபட்ச திருமால்களின் வேறுபாடுகளை உணராது இருவகைத் திருமால்களையும் ஒன்றாய்க்கருதி திருமாலை வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் கருதுகின்றார்கள் என்றமைக்காக, சைவர்கள் திருமால் சைவத்தெய்வமல்ல என்று முடிவெடுத்தல் கூடாது. அது அறியாமை!!!!



சைவர்கள் தமது வழிபாட்டறையில் இராமர்,கண்ணன்,திருமால் படங்கள் வைக்கும்போது படத்தின்மேல் படங்களைத் தாபிக்கும்போது செய்யும் வீட்டுப்பூசையில் வீபூதியையே பூசிவிடுதல் ஈழத்து சைவமரமாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சைவர்கள் இராமர்,கன்ணன்,திருமாலை வீபூதிதாரணர்களாக படங்களை வரைந்துகொண்டால் இன்னும் சிறப்பாக அமையும்.



திருமுருக கிருபானந்தவாரியாரின்படி, தீபாவளியானது சிவசக்தி இணைந்த நாள். எனவே அவ்வண்ணமும் நாம் இத்திருநாளைக் கொண்டாடலாம். மேலும் இத்தீபாவளிக்கு பல்வேறு கதைகள் பிரதேசத்துக்கு ஒன்றென்ற அடிப்படையில் உண்டு. இதனை சீக்கியர்களும்,சமணர்களும்கூட தமது மதத்திற்கு ஏற்ப காரணங்களைக் கொண்டு கொண்டாடுகின்றனர்.எனவே இது சமணத்தில் இருந்து வைதீகசமயங்களுக்கு வந்ததா அன்றி வைதீகசமயங்களில் இருந்து சமணத்துக்கு வந்ததா என்று விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. எப்படி, முருகனின் வைகாசி விசாகமானது பௌத்தர்களுக்கு புத்தரின் பரிநிர்வாணம் அடைந்தநாளாக விளங்குகின்றதோ அதுபோல் ஒருநாளே பல்வேறு சமயத்தவர்களுக்கு சிறப்புநாளாக விளங்குவது பரதகண்டத்தில் தோன்றிய சமயங்களுக்கு பொதுவான இயல்பு. எனவே இதில் திராவிடமேதாவிகள் தேவையில்லாமல் வயிற்றெரிச்சல் படத்தேவையில்லை.
அதுசரி, தமிழ்க் கடவுள் முருகன் சூரபத்மர்களைக் கொண்டாரே......அதனைத் தமிழர் சூரன்வதை என்று தமிழக ஆலயங்களில் கொண்டாடுகின்றார்களே......அது முறையா? இப்படியொரு ஐயம் சிலமேதாவிகளுக்குத் திடிரென வந்துவிட வாய்ப்புண்டு!!! இம்மேதாவிகளே தெரியாத்தனமாக "தமிழ்க்"கடவுள் முருகன் என்பதை ஏற்பதால் விளக்கக்கட்டுரைகள் எழுதவேண்டிய சிரமங்கள் இல்லை என்றுணர்கின்றேன். சரி, நம்சைவத் தமிழர்கள் அனைவரும் இத்தீபாவளித் திருநாளை கரியநிற வீபூதிதாரண சைவத்தமிழ்க் கண்ணன் நரகாசூரனை வதைத்த நன்னாளாக, சக்தி சிவத்தில் இடப்பாதி பெற்ற திருநாளாக கொண்டாடுவோமாக.