புதன், 8 அக்டோபர், 2014

சங்கச் சிந்தனைகள் 1

இரு மலை முகடுகளுக்கிடையில் ஏற்பட்ட இயற்கையான சரிவில் - சோவென்ற இரைச்சலுடன் பொங்கி வழியும் அருவியின் கரையில் - அந்த அழகிய தோட்டம் அமைந்திருந்தது. அது ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது.

அந்தத் தோட்டத்தில்தான் ஒரு மாயக் கரங்களால் மானுடத்தின் முதல் ஆண்வித்தும் பெண்வித்தும் இரத்தம் கலந்த ஈரமண்ணில் நடப்பட்டன. 

நடப்பட்ட விதைகள் வேர்விட்டன - முளைவிட்டன - நாளடைவில் கிளைபரப்பி வான்தொட்டன.

மலையிலிருந்து பொங்கிப் பெருகிய அருவி அவர்களுக்கு நீர் கொடுத்தது. மரங்களும் தாவரங்களும் கனி, காய், கிழங்கு வகைகளை வாரி வாரி வழங்கின. ஒரு குகை அவர்களின் இருப்பிடமாய் இருந்தது. 

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் ஆதமுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தாள்.

அவர்கள் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து வாழ்ந்தார்கள். இயல்பாக இன்பம் துய்த்தார்கள். பட்டாம்பூச்சிகளைப் போல் சிலிர்த்துச் சிலித்துக் கூடினார்கள் - பிரிந்தார்கள்.

தோட்டத்தின் ஓரமாய் இருந்த பல்வேறு மரங்களில் ஒன்றில் அந்த விலக்கப்பட்ட கனி பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அதனையொட்டிய மரப் பொந்தில் அந்த சைத்தான் நாகம் வசித்து வந்தது. ஆதாமும் ஏவாளும் இன்னும் அந்த விலக்கப்பட்ட கனியை உண்ணவில்லை. விலக்கப்பட்ட கனியை உண்ணாமலே ஒரு இயல்பான நிகழ்வாக காமம் அவர்களுக்குள் முகிழ்ந்தது. 

படைத்தவன் காமத்தை விலக்கிவைக்கவில்லை. ஏனெனில் காமமின்றி - இரு பால் கலப்பின்றி - அந்தக் கலப்பின் பூரிப்பும் பரவசமும் இன்றி - படைப்பு நிகழாது. அது வாழ்வின் ஆதார சக்திகளுள் ஒன்று. அதனால் பசியைப் போல - அன்பைப்போல - இயல்பாகப் பெருகிய காம உணர்ச்சியை ஒப்புக்கொண்டு அவர்கள் இன்பமாக இருந்தார்கள். அதனை அடக்கவில்லை - விலக்கவுமில்லை.

அவர்களுக்கிடையில் நிலவிய அன்பின் அடையாளமாய் குழந்தைகள் பிறந்தன. அன்னை தந்தைக்கிடையில் ஓடிய உறவும் நெகிழ்வும் குழந்தைகளுக்கு ஒட்டிக்கொண்டன. அவர்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த பிராணிகளிடம் அன்பும் நேசமும் கொண்டார்கள். ஆடி ஓடி விளையாடினார்கள்.

ஒரு பலகீனமான தருணத்தை நோக்கி அந்த சைத்தான் நாகமும் ஆப்பிள் மரத்தில் பொறுமையோடு காத்திருந்தது.

ஒரு நாள் அந்தப் பக்கம் தனியாக வந்த ஆதமுடன் நாகம் நயமாகப் பேச்சுக் கொடுத்தது.

"ஒரு முறை இந்தக் கனியை சுவைத்துத்தான் பாரேன் ! வாழ்க்கையில் நெறிமுறைகளைப் பின்பற்றி என்ன கண்டாய் ? நெறிகளை மீறுவதில் உள்ள சுவாரஸ்யம் ஒரு முறை மீறினால்தான் விளங்கும்... ஏன் கோழையாகவே காலத்தைக் கழிக்கிறாய் ? கடவுளிடம் அப்படியென்ன பயம் உனக்கு ? அட, எத்தனை பழங்களை தின்றிருக்கிறாய் ! இன்னும் ஒரு பழம் - வேறு வகை - வேறு சுவை - அவ்வளவுதான் !"

ஆதமுக்கு சற்று பயமாக இருந்தது... கடவுள் கண்டுபிடித்துவிட்டால்கூட பரவாயில்லை ! ஏவாளின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டால் ?

"அட, யார் மெனக்கெட்டு ஏவாளிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லப் போகிறார்கள் ? உன் மீது சத்தியமாக நான் அந்த நீச காரியத்தைச் செய்ய மாட்டேன் ! நீங்களெல்லோரும் இந்தப் பழத்தை என்னைப்போலவே உண்டு அதன் ருசியை அனுபவிக்க வேண்டுமென்பதுதான் என் ஒரே ஆவல் !"

ஆதாம் அந்த நாகத்தின் சொற்களுக்குப் பணிந்தான். கனியை உண்டான். உண்டதும் அவனுக்குத் தோன்றிய முதல் எண்ணம் இதனை ஏவாளிடமிருந்து மறைத்து வைத்து விடவேண்டும் என்பதுதான் !

வேடிக்கை என்னவென்றால் ஏவாளும் அதற்கு முதல்நாள் நாகத்தின் பேச்சில் மதிமயங்கி அதே பழத்தை உண்டு அந்த விஷயத்தை ஆதமிடமிருந்தும் மறைத்திருந்தாள்.

இதுதான் இருவருக்குமிடையில் பொய்மையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தது.

நாளடைவில் அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் ஏசினார்கள் ! தாம் மறைத்து வைத்த விஷயம் எங்கே வெளிவந்துவிடுமோ என்று பயந்தார்கள். அந்த பயம் கோபமாக, வஞ்சகமாக, ஆத்திரமாக, பொறாமையாக, வெறுப்புணர்வாக பல்வேறு வேடங்களில் பரிணமித்தது.

அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு விலக ஆரம்பித்தார்கள். 

இப்படித்தான் மனித இனம் தீமையின் பாதையில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தது. 

பொய்மைதான் விலக்கப்பட்ட கனி. அதிலிருந்துதான் பல்வேறு தீமைகளும் முகிழ்த்தன.

விலக்கப்பட்ட கனி கதை தத்துவார்த்தமானது. அது கவிஞன் ஒருவனால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அது கவித்துவமாக மிளிர்கிறது. அதனை ஏதோ வரலாற்று சம்பவமாகவோ மதரீதியாகவோ காண்பவர்கள் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள்.

தீமை என்று ஒன்றை காணாமல் மனித இனம் ஒரு காலத்தில் இருந்தது. அப்புறம் ஒரு காலத்தில் தீயதன் முதல் வித்து மனித மனத்தில் விழுந்தது. அதற்கப்புறம்தான் மனிதன் நல்லதை விட்டுவிட்டு அல்லதைக் கைக்கொள்ள ஆரம்பித்தான்.

அதற்கப்புறம்தான் நல்லது எது தீயது எது என்ற பிரிவினையே எழுந்தது.

நல்லதை விளக்க சாத்திரங்களும் வேத நூல்களும் எழுதவேண்டிதாகிவிட்டது. அவதாரங்களும் தேவ தூதர்களும் மனிதனுக்கு தேவைப்பட ஆரம்பித்தார்கள்.

இன்னமும்கூட வேத நூல்களை - இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்னும் உபதேச மார்க்கங்களை - மனிதன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறான். தன்னை உய்விக்கப்போகும் அவதார புருஷர்களை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். "இதோ இப்போது வந்துவிடுவார் ! எல்லோரும் இறுதித் தீர்ப்புக்குத் தயாராகுங்கள் !" என்று வருடக்கணக்காகப் புலம்பிக்கொண்டிருக்கிறான்.

பாவம் - இத்தனை முயற்சிகள் செய்தும் பெருகிவரும் தீமைகளுக்கு அவனால் ஈடுகொடுக்கமுடிவதில்லை !

தொல்காப்பியர் சொல்கிறார் :



"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் வகுத்தனர் கரணம்" என்ப


(பொருளதிகாரம் - கற்பியல் - எண் 1089)

இவர் எந்த இடத்தில் இதனை சொல்லியிருக்கிறார் என்பது மிக மிக ஆச்சரியமான விஷயம். கற்பியலில் கற்பு முதலான விஷயங்களை விளக்க முற்படும்போது திடீரென்று இப்படி ஒரு போடு போட்டுவிடுகிறார்.

என்னதான் சொல்கிறார் ?

"பொய் முதலான குற்றங்கள் தோன்றிய பிறகே சான்றோர் சடங்குகளை வகுத்து வரையரைப்படுத்தினர் என்று சொல்வார்கள் !" என்கிறார்.

சற்று விரித்துக் கூறுவதானால் இப்படிச் சொல்லலாம் :

அதாவது பொய் மற்றும் பிற குற்றங்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. அப்போது சடங்குகளும் சம்பிரதாயங்களும் நெறிகளும் தேவையில்லாமல் இருந்தன. பிறகு மானுடத்தின் முதல் தீமையாக பொய்மை தோன்றியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றங்களும் பிறந்தன. இதற்குப் பின்னால்தான் - இவை வாழ்வில் புகுந்துவிட்ட காரணத்தினால்தான் - சான்றாளர்கள் சாத்திர சம்பிரதாயங்களை வகுக்கவேண்டிதாகிவிட்டது என்று சொல்வார்கள் !

இதனை வேறு நூற்றாண்டைச் சேர்ந்த யாராவது சொல்லியிருந்தால் கதையே வேறு. ஆனால் காலத்தால் மிகவும் முற்பட்ட தமிழ்க் கவியானவர் இப்படிச் சொல்லும்போது இதன் பரிமாணங்கள் வானளாவ உயர்ந்துவிடுகின்றன.

"என்று சொல்வார்கள் !" என்று சொல்கிறார். அதாவது தொல்காப்பியர் காலத்திலேயே பொய்யும் வழுவும் நிலைபெற்றுவிட்டன. ஆக அதற்கும் முற்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் அவை தோன்றியிருக்கவேண்டும்.

மற்ற குற்றங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துவிட்டவர் பொய்யை மட்டும் தனியாக முதன்மையாகக் குறிப்பிடக் காரணம் அது மானுடம் கண்ட முதல் தீய வித்து என்பதே. அதிலிருந்துதான் பிற குற்றங்களும் தவறுகளும் தோன்றியிருக்கவேண்டும்.

"வழு" - என்ன அழகான சொல் ! வழுக்குதல் என்பதே இதிலிருந்து தோன்றியதுதானோ !

"ஐயர்" என்பது அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட சாதியைச் சுட்டும் பெயராக இருக்கவில்லை. பொதுவாக சான்றாளர்களைக் குறிக்கவே பயன்பட்டு வந்தது. "ஐயன்மீர்" என்னும் சொல்வழக்குகூட இன்றைக்கு அவ்வளவாக தென்படுவதில்லை.

இதனை திருமணம் மற்றும் கற்பு சம்மந்தப்பட்ட இடத்தில் சொல்வதிலிருந்து மனிதன் பெண்ணாசையின் பாற்பட்டுத்தான் குற்றம் புரியும் பாதையில் ஈடுபடத்தொடங்கினான் என்பதும் ஒரு கருத்து. மண்ணாசை - பெண்ணாசை- பொன்னாசையில் முதலிடம் பெண்ணாசைக்குப் போலும்.

தொல்காப்பியர் இப்படி நிறைய ஆச்சரியங்கள் வைத்திருக்கிறார்.